புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சாட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சென்றடைந்த செயலி இது. இந்நிலையில், ‘சாட்ஜிபிடி’ தற்போது உலக அளவில் இயங்கவில்லை. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையை அணுக முடியவில்லை. ‘சாட்ஜிபிடி’ இயங்காதது தொடர்பான புகார்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக அளவில் பதிவாகி உள்ளன.
நிகழ்நேர கண்காணிப்பு தளமான Downdetector-இன் படி, ‘சாட்ஜிபிடி’ முடக்கம் குறித்த பயனர் புகார்கள் பிற்பகல் 3:00 மணியளவில் வேகமாக அதிகரித்தன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்து வந்த சுமார் 88 சதவீத புகார்கள், சாட்பாட் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதாக பதிவாகி உள்ளது. 8 சதவீதம் பேர் மொபைல் செயலியில் இயங்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.