2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோத உள்ளன.
பட்டத்தை தீர்மானிக்கும் போட்டியானது இன்று (03) இரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சீசனின் இறுதிப் போட்டி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் இரு அணிகளும் தங்கள் முதல் ஐ.பி.எல். பட்டத்துக்காக ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளன.
பல ஆண்டுகளாக, இரு அணிகளும் ஒரு தீவிர ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன.
இப்போது இறுதியாக தங்கள் ரசிகர்களுக்கு ஒரு கிண்ணத்தை பரிசாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ்
லீக் கட்டத்தின் முடிவில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான PBKS அணி RCB அணியை மிகக் குறுகிய வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இரு அணிகளும் 14 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் முடித்தன.
ஆனால் PBKS அணி நிகர ரன் விகிதத்தில் சிறந்து விளங்கியதால் முதலிடத்தைப் பிடித்தது.
PBKS அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக இன்று பங்கேற்கிறது.
2014 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெய்லி தலைமையிலான PBKS அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு
நடப்பு சீசனில் புள்ளிகள் பட்டியலில் ரஜத் பட்டிதர் தலைமையிலான RCB அணியானது இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் முதல் தகுதிச் சுற்றில் PBKS அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
RCB அணி தனது நான்காவது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் இன்று விளையாடவுள்ளது.
அவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர்.
அனில் கும்ப்ளே தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
2011 ஆம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலான RCB அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியடைந்தது.
விராட் கோலி தலைமையிலான RCB அணி 2016 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் டேவிட் வோர்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தது.
எனவே, நடப்பு சீசனில் பெருமைக்காக இரண்டு அணிகள் போட்டியிடுவதால், ரசிகர்கள் ஒரு பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
அதிக ஓட்ட எண்ணிக்கைக்கான வாய்ப்பு
இறுதிப் போட்டி நடைபெறும் ரேந்திர மோடி மைதானம், இந்த சீசனில் தொடர்ந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக உள்ளது.
அதிக ஓட்ட எண்ணிக்கைகளை குவிப்பதற்கு பெயர் பெற்ற RCB மற்றும் PBKS இடையேயான வரவிருக்கும் மோதலும் அதே போக்கைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இதே மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்த போராடினர்.
மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 203/6 என்ற மகத்தான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.
ஆனால், பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் அதை முறியடிக்க முடிந்தது.
ஆடுகள நிலைமைகள் மற்றும் அண்மைய செயல்திறனைக் கருத்தில் கொண்டு, இறுதிப் போட்டி மற்றொரு அதிக ஓட்டம் குவிக்கப்படும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியும் மோசமான வானிலை காரணமாக தாமதமானது.
பெரும்பாலான நாட்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், செவ்வாய்க்கிழமை மாலையில் மழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு நிலைய அறிக்கைள் சுட்டிக்காட்டுகின்றன.
இது சாத்தியமான இடையூறு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
இதனிடையே, வானிலை தாமதங்களைச் சமாளிக்க இரண்டு மணிநேர மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று போட்டியை முடிக்க முடியாவிட்டால், அது மேலதிக நாளான புதன்கிழமை (04) மீண்டும் தொடங்கும்.
மேலதிக நாள் ஆட்டமும் மழையால் இரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.