புதுடெல்லி: இன்றைய ஏஐ சூழ் டிஜிட்டல் உலகத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்தவொரு திறன் மிகவும் அவசியம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியுள்ளார். டெக் உலகில் அடியெடுத்து வைக்கும் இளம் பொறியாளர்களுக்கு அறிவுரையும் அவர் வழங்கியுள்ளார்.
“மென்பொருள் குறித்த அடிப்படைகளை மென்பொருள் பொறியாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அது மிகவும் முக்கியமானது. ஏஐ நுட்பத்தின் வரவு எண்ணற்ற மென்பொருள் வடிவமைப்பாளர்களை உருவாக்க வழி செய்துள்ளது.
ஏனெனில், கோடிங் சார்ந்து ஏஐ நிச்சயம் உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் பொறியாளர்களின் பணியை இன்னும் வேகப்படுத்தி உள்ளது. இருந்தாலும் அது பயனரின் சிந்திக்கும் திறன் மற்றும் வழிகாட்டுதலை சார்ந்தே உள்ளது. அதனால் இந்த துறையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒரு திறன் இருந்தால் ஏஐ-யை வெல்லலாம்.
அண்மையில் நான் எழுதிய கோட் (Code) ஒன்றில் பிழை இருந்தது. அதை கண்டறிய எனக்கு ஏஐ மூலம் இயங்கும் ஜிட்ஹப் கோபைலட் பயன்படுத்தினேன். இறுதியாக அதை சரி செய்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பிழை வெறும் 1 சதவீதம் என்ற எண்ணிக்கையில் கூட இல்லை. ஆனால், அது என்ன என அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. நான் நன்கு அறிந்த விஷயம் அது” என அவர் தெரிவித்துள்ளார்.
57 வயதான சத்ய நாதெள்ளா இந்தியாவைச் சேர்ந்தவர். ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கடந்த 1992-ல் பணிக்கு சேர்ந்தார். 2014-ல் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.