ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையத்தில் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் கீழ் மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான சிறப்பு செயலமர்வுத் தொடரின், வட மாகாண செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தில் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களாலும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதனால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.

எனவே இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பு நகருக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச செயலகங்கள் மூலம் இலங்கையின் அணைத்து பிரதேசங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே விளக்கமளித்தார்.

இதேவேளை நேற்றைய குறித்த நிகழ்வில் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையவழி ஊடாக வழங்குதல், வட மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் உட்பட வடமாகாண அரச அதிகாரிகள், ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!