பாடசாலை மாணவர்கள் மூவருக்கு, வாசனைத் திரவியத்தை (Perfume) நுகர்ந்தமையால் தலைச்சுற்று, வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இம்மாணவர்கள் மூவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.
தலவாக்கலை நகரிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வகுப்பறையில் மாணவன் ஒருவன், வாசனைத் திரவியத்தை சக தோழர்கள் மீது தெளித்துள்ளதாகவும், பின்னர் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, 6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.