வாஷிங்டன்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிஹாரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், சதித் திட்டம் தீட்டியவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்தை வேரறுக்கும் காலம் வந்துவிட்டது. 140 கோடி இந்தியர்களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடியாது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். எந்தவொரு பயங்கரவாதியும் தப்ப முடியாது. பூமியின் கடைசிவரை அவர்களை துரத்துவோம். பயங்கரவாதிகளிடம் மீதமிருக்கும் நிலத்தையும் அழிக்கும் நேரம் வந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்படும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.