பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” நாட்டில் சமூக வலைத்தளம் பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாகவும், இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் சீரழிவது கண்கூடாகக் காணமுடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் தான் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமே முடிவெடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும், மக்ரோன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.