திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ககன்யான் விண்கலத்தில் 4 விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி 400 கி.மீ உயரத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்யும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.
ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட்டில் பொருத்தக்கூடிய இன்ஜின்கள் சோதனையும் இஸ்ரோ மையங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராக்கெட்டில் பொருத்தக்கூடிய கிரையோஜனிக் இன்ஜின், செமி கிரையோஜனிக் இன்ஜின், விகாஸ் இன்ஜின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் திரவ எரிபொருளைக் கொண்டு இயக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட விகாஸ் இன்ஜின் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 17 விநாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இந்த இன்ஜினை பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தலாம் எனவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.