ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப் சுற்று முடிவில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் மோதின.
இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த மயங் அகர்வால் (24 ரன்கள்) சஹால் சுழலில் சிக்கினார்.
இதனையடுத்து, கேப்டன் ரஜத் பட்டிதார் (26 ரன்கள்) கைல் ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி (35 பந்துகள் 43 ரன்கள்) ஓமர்சாய் பந்தில் அவரது சிறப்பான கேட்ச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில், லிவிங்ஸ்டன் 25, ஜித்தேஷ் சர்மா 24, ரோமரியோ 17 ரன்கள் ஆகியோரின் அதிரடியால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, பஞ்சாப் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்தில் பிரியன்ஸ் ஆர்யா 24 ரன்களில், பில் சால்ட்டின் அபாரமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து, பிரப்சிம்ரன் 26 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய ஜாஸ் இங்கிலீஷ் 39 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
ஒருபுறம், ஷசாங் சிங் (30 பந்துகள் 61 ரன்கள்*)இறுதிவரை தனி ஆளாக போராடினார். இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.