ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்

ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்
01. “என் அம்மா சமைத்த உணவு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு அப்படி உசிரு” “என் தாய் கை பக்குவமே தனி தான்” இப்படி எல்லாம் பாசமாக தன் அம்மாவை பற்றி பேசுகின்ற மகன்கள் உண்டு.

ஆனால் தன் அம்மாவினது ரசனை, விருப்பம் தனி திறமைகளை அறிந்த ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறீங்க?

02. இன்று என்ஜினியரிங், டாக்டர் படிக்கிற பெரும்பாலனாவர்களின் ஆசை, இலட்சியம் எல்லாம் வேற ஏதாவதாக தான் இருக்கும்.

ஆனால் பெத்தவங்க ஆசைய நிறைவேற்ற வேண்டும் என்று பிடிக்காத பாடாத்தை படிச்சிட்டு இருப்பார்கள். ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அப்படி படிக்கும் எந்த குழந்தையும் அம்மாவின் கனவை சுமக்கவில்லை. அப்பாவின் கனவை தான் சுமக்குறார்கள். எதனால் அப்படி ?

03. “மச்சி.. அந்த figure super டா” என்று கூறும் எந்த பையனும் தனது அக்கா, தங்கை எவ்வளவு அழகாக இருக்கும் போதிலும் அடுத்தவர்களால் அப்படி அழைப்பதை விரும்பவில்லை. பிறகு ஏன் அடுத்தவர்களின் அக்கா, தங்கையை மட்டும் அப்படி அழைக்கின்றீர்கள்?

04. ஒரு கவிதை வாசித்தேன். ”அழகாக இல்லை என்பதால் அவள் தங்கையாகிப் போனாள்” என்று ஒரு முடிகின்றது அந்தக் கவிதை. அப்படியெனில் “தங்கை அழகாயிருந்தால் அவள் என்னவாயிருப்பாள்” என்று கேள்வி எழுகின்றது.

05. பெண் பார்க்கும் போது “கண்டிப்பாக வேலைக்கு செல்லும் பொண்ணு தான் வேணும் என்று தரகர்கிட்ட சொல்லிடுங்க” “கல்யாணத்துக்கு பிறகு கண்டிப்பாக வேலைக்கு போகக் கூடாது” என்ற வரிகள், “நான் என் பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பவே மாட்டேன். வீட்ல ராணி போல வைத்திருப்பேன்” என்றும் “என் மனைவிக்கு நான் சம உரிமை கொடுக்கின்றேன், அதனால் வேலைக்கு அனுப்புகின்றேன். அவ படிச்ச படிப்பு வீணாகக் கூடாது இல்ல” என்றும், பல விதமாக பேச்சி உருமாறுகின்றன.

இங்கு மனைவியை ராணி போல் வைத்து கொள்பவர்கள், தன் மனைவியை தனியாக எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். தனக்கு பிடித்த எதையும் செய்ய விட மாட்டார்கள். பச்சையாக தௌிவாக சொல்வதென்றால் அவளை வீட்டிற்குள் சிறை பிடிப்பார்கள்.

ஆனால் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து, சந்தோசமாக வைத்திருபதாக நினைப்பவர்களும் உண்டு. தங்கத்திலான கூண்டு என்றாலும், சிறை சிறை தானே? சம உரிமை கொடுப்பதாக கூறும் ஆண்களிடம் நேரடியாக ஒரு கேள்வி, நீங்கள் கொடுத்து அவள் பெற்றுக் கொள்வது சம உரிமையாக இருக்க முடியுமா?

குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகின்றீர்கள், அது சரி. அந்த வேலைகளை பகிரும் உரிமையை(!?)… நீங்கள் மனைவிக்கு தரும் போது ஏன் வீட்டு வேலையை பகிரும் உரிமையை நீங்கள் எடுத்து கொள்வதில்லை?

06. “என் மகன் அப்படியே என்னபை் போலவே படிப்பான்” என்று பெருமை அடித்து கொள்ளும் அப்பாக்கள் எத்தனை பேர் தன் மகன் கைக் குழந்தையாக இருந்த போது அவன் மலம் கழித்த துணியை மாற்றி கழுவி விட்டுருப்பீர்கள்? உங்கள் மகன் வீட்டு பாடம் எழுத எத்தனை பேர் உதவி செய்திருக்கின்றீர்கள்? குழந்தையை வளர்ப்பது அவள் வேலை எனில் “initial ” என எதற்காக உங்கள் பெயரை மட்டும் போட வேண்டும்??

பாடசாலையில் இடம் வாங்கி, கற்றல் உபகரணங்களை வாங்கித் தருவதுடன் உங்கள் கடமை முடிந்து விட்டதா என்ன? அது எப்படி உங்கள் மகன் ஜெயிக்கும் போதெல்லாம் அது உங்கள் மகனாகவும், தோற்கும் போதெல்லாம் அது உங்கள் மனைவியின் மகனாகவும் மாறி போகின்றான்?

07. “என் மகள் எவ்வளவோ பெரிய வேலையில் இவ்வளவோ அதிகம் சம்பளம் வாங்கிறாள்” என்று பெருமை பேசித் திரியும் எத்தனை அப்பாக்கள், தங்கள் வேலையிடத்தில் தன் மேலதிகாரி ஒரு பெண் என்பதால் அவள் ஒழுக்கத்தை, நடத்தையைப் பற்றி வதந்திகளை பரப்பாமல் இருந்துள்ளீர்கள்?

Leave a Reply