இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல்

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல்
Photo By defence.lk
 ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும், நாட்டின் வணிக தலைநகரான கொழும்பில் உள்ள மூன்று சொகுசு ஹோட்டல்களையும் குறிவைத்து தீவிரவாத தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதே தினம், தெமட்டகொடையில் ஒரு வீடமைப்புத் தொகுதியிலும் தெஹிவளையில் ஒரு தங்குமிடத்திலும் சிறிய குண்டுகள் வெடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இக் கொடூரத் தாக்குதலில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள், மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட 277 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிஸ்தவ பக்தர்கள் மீது இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அத்துடன் ஷாங்ரி-லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி, மற்றும் டிராபிகல் இன் ஆகிய ஹோட்டல்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அரச புலனாய்வு துறையின் அறிக்கையின் படி, இரண்டாவது தொடர் தாக்குதல்களும் திட்டமிடப்பட்டன, ஆனால் அரசாங்க சோதனைகளின் விளைவாக அவை வெற்றிகரமாக நிறுத்தப்பட்டன.

இலங்கை அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட எட்டு தீவிரவாதிகளும் இலங்கைப் பிரஜைகள் என்பதுடன் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்றழைக்கப்படும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் என்பது வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு உள்ளூர் தீவிரவாத இஸ்லாமிய இயக்கம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் பௌத்தர்கள் மற்றும் சூஃபி முஸ்லிம்களை குறிவைத்தது. மார்ச் 15, 2019 கிறிஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசாங்கம் நம்புவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஏப்ரல் 23 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏப்ரல் 23, 2019 அன்று, இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவன்டின் (ஐ.எஸ்.ஐ.எல்) பிரச்சார நிறுவனமான அமாக் செய்தி நிறுவனம், “இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் [ஐ.எஸ்.ஐ.எல் எதிர்ப்பாளர்களை] குறிவைத்து தாக்குதல் இஸ்லாமிய அரசு போராளிகளால் நடத்தப்பட்டது” என்று அறிவித்திருந்தது.

எனினும் இலங்கை ஐ.எஸ்.ஐ.எல் எதிர்ப்பு அணியில் கிடையாது என்பதுடன், இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கைப் பிரஜைகளாவர். இதற்கிடையில், ஐ.எஸ்.ஐ.எல் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தாக்குதல்காரர்களைப் பாராட்டி 18 நிமிட வீடியோவை வெளியிட்டார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எல் நேரடியாக ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குற்றப் புலனாய்வுத் துறை கூறியது.

sources     i – si.wikipedia
ii – defence.lk

Leave a Reply