ரமளான் நோன்பும் போதைகளும்

நோன்பும் போதைகளும்
ரமளான் என்பதன் பொருள்  எரித்தல், கரித்தல், என்பதாகும், மனிதர்களின் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட பாவங்கள் கரிந்து போகின்ற மாதம் இது. ரமளான் நோன்பை குறித்து அல்-குர்ஆன் இப்படி வர்ணிக்கின்றது.

இறை விசுவாசிகளே உங்கள் முன் உள்ள கூட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது  ஏனெனில் நீங்கள் இறையச்சம் கொள்வதற்காக.

இவ்வசனத்தில் குறிப்படப்பட்ட படி மனிதர்கள் இறையச்சம் பெறுகிற விடயத்தில் நோன்பு மிக முக்கியமானதாகும்.

இந்த நோன்பின் ஊடாக மனிதன் தன் உணர்வுகளின் மீது ஆளுமை பெறுகின்றான். இந்த ஆளுமைதான் “தக்வா” எனும் இறையச்சதின் ஆணிவேறாகும்.

தன் புற உறுப்புகளை மிகவும் சரியாக கையாளுகின்ற மனிதன் தனது உணர்வு மற்றும் இச்சைகளில் ஆளுமை செலுத்த இயலாமல் போகிறான் அல்லது அதை மறந்து வாழ்கிறான்.

நோன்பு  அந்த ஆளுமையை நமக்கு கற்றுதருகிறது.

நோன்பின் நோக்கம் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மட்டும் கிடையாது, அதன் ஊடாக மனிதனின் முழுமையான குணமும் சிறந்ததாக மாற்றி அமைக்கப்படுவதைத் தான் இஸ்லாம் விரும்புகிறது. ஏனெனின்,

யார் பொய் சொல்வதையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்துடனும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை , என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் மூலமாக நாம் உணர்து கொள்ளக் கூடிய ஒரு பாடம், வாழ்வின் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் பொய் பேசுவதை செய்கிற மனிதன், பின் அது வழக்கமாகி அதுவே வாழ்கையில் பழக்கமாகவும் ஆகிவிடுகிறது.

அந்த பழக்கம் குறித்தான எந்தவித உணர்வு கூட இல்லாமல் அதை தொடர்ந்து சர்வசாதாரனமாக செய்து கொண்டிருக்கிறான்.

அது போன்று அன்றாடம் நம் வாழ்வில் காணப்படும் செயல்களை திரும்பி பார்பதற்கான ஒரு சந்தர்பம் தான் நோன்பு ஆகும்.

ரமளானுடைய காலங்களில் நம்முடைய பழக்கத்தில் உள்ள சில விடயங்களை நாம் விடுகின்றோம். உதாரணமாக பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருட்களை முற்றிலுமாக இந்த ரமளானில் விட்டு விடுகின்றோம்.

இதை விடுவது மட்டும் போதும் என்றும் நினைத்து விடுகிறோம். ஆனால், ஏனைய ஹராமான சொல், செயல், பார்வைகளை விட்டு தவிர்ந்திருப்பதற்கும் அழகிய ஒரு வழியை அல்லாஹ் (ﷻ) நமக்கு காண்பிக்கிறது.

உங்களுக்கு ஆகுமாக்கப்பட்ட ஹலாலாக உள்ள பொருளை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று இறைவன் கூறுகிறான்.

உலகில் எவ்வளவு விலை உயர்ந்த மதிப்புமிக்க பொருளாக இருந்தாலும், அழகிய ஆடம்பரமான பொருளாக இருந்தாலும் அது நமக்குரியது என்று ஆகிவிட்டால் அதன் அருமைகளை பெறுமதியை நாம் மறந்து போகின்றோம். மற்றதை தேட ஆரம்பிக்கின்றோம்.

இன்று உணவுகளும் ஒரு போதையாக மாறிவிட்டது. விதம் விதமான உணவை உண்பதற்கு உயர் தரத்திலான ஹோட்டல்களுக்கும், வெகு தூரம் பிரயாணிக்கிறோம். ஏன், அந்த போதையை உணரத்தான்.

எமக்கு முன்னால் உள்ள ஹலாலான உணவை நீ உண்ணக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது. அப்பொழுது தான் ஹலாலான உணவை குறித்து மனிதன் சிந்திக்கிறான். உணவின் மீதுள்ள அந்தப் போதையும் தெளிகிறது.

ஹலாலான அழகிய மனைவி தன்னுடன் இருக்க அதை விடுத்து ஏனைய அன்னியப் பெண்களை அவன் கண்கள் தேடுகின்றது. அனுமதிப்பட்ட ஹலாலான தன் மனைவியை தொடுவதற்க்கும், இச்சை பேச்சுகளைப் பேசுவதற்கும் நோன்பு தடையை ஏற்படுத்தும் போது மனிதனின் அன்னியப் பெண்கள் மீதான தனது போதை தெளிகிறது.

புறம், கோல், பொய் உட்பட கெட்ட பேச்சுகளுக்கு பழக்கமாகி விட்ட நாவு அந்த போதையிலே திழைத்திருக்கிறது. நல்ல விடயங்களையே ரமளானில் குறைத்து பேசவும். யாராவது உங்களுடன் சண்டையிட வந்தால் நான் நோன்பாளி என்று கூறவும் எனபதைக்கொண்டு பேச்சில் உள்ள போதையை இஸ்லாம் நமக்கு உணரவைக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட இன்றைக்கு இளையவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல். அனைவரினதும் நேரத்தையும் காலத்தையும் மொத்தாக தின்று கொண்டிருப்பது இன்றைய Social Media/ Mass Media என்று அழைக்கப்படும் WhatsApp, face book, Telegram, TikTok, YouTube போன்ற சமூக ஊடகங்களாகும்.

எவ்வளவு நேரத்தை அதில் வீனடித்து விட்டோம் என்று கூட தெரியாமல் தன்னையே மறந்து வேறு ஒரு உலகிற்கு நாம் சென்றுவிடுகின்றோம்.

இன்று காணப்படும் எல்லா போதைகளையும் விட மோசமான போதை இந்த  சமூக ஊடகம் தான். ஆக இந்த ரமளானில் நாம் ஒரு உறுதி எடுக்க வேண்டும்.

Ramalan free from Facebook, WhatsApp, telegram, TikTok என்று நம்முடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸைப் போட்டு விட்டு அவைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். நாம் அதில் பாயான் கேட்கலாம், நல்ல விடயங்களை பகிர்ந்துகொள்ளலாமே என்று நம் மனதும் ஷைத்தானும் வலியுறுத்தும்.

அல்லாஹ் (ﷻ) காப்பானாக ரமளான் என்பது அமல்களின், நன்மைகளின் மாதம் Month of Action அது நல் அமல்களை அதிகமதிகம் செயல்படுத்த வேண்டிய மாதம்.

அதில் அதிகமாக குர்ஆன் ஓதுவது, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, ஸலவாத் சொல்வது, என்ற நல்லமல்களால் எமது மறுமை ஏடு நிறப்படவேண்டும்.

அதில் ரஸூலுல்லாஹி (ﷺ) அவர்கள் பொறுமையின் மாதம் என்று வர்ணித்ததைப் போன்று அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து நமது குண நலன்கள் அழகிய முறையில் மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்ம்.

இந்த ரமளானை முழுமையாக பயன்படுத்தி இறையச்சமுடைய நல்லடியானாகா மாறுவதற்கு அல்லாஹ் உதவிசெய்வானாக ஆமீன்.

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply