நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்
நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு முக்கியம் என்பதை அவர்கள் கடைப்பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்ட பிறகு நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூபக்ர் (ரலி) யிடம் கேட்டார்கள். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.
நூல் : புகாரி-3092
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ஃபாத்திமாவுக்குப் பதிலளித்தார்கள்.
இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர் ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விடமாட்டேன். ஏனெனில் அவர்களது செயல்களில் எதனையாவது நான் விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி-3091
34) நபிகளாரின் உறவினர்களை நேசித்தவர்
ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கையை அபூபக்ர் (ரலி) ஏற்றுக் கொள்ளாததால் நபிகளாரின் குடும்பத்தாருக்கு அபூபக்ர் (ரலி) அநியாயம் செய்து விட்டார் என்றும் பெருமானாரின் உறவினர்களை அபூபக்ர் மதித்து நடக்கவில்லை என்றும் ஷியாக்களில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல. ஃபாத்திமா (ரலி) அவர்களின் கோரிக்கை நபிகளாரின் கூற்றுக்கு எதிராக இருந்த ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அபூபக்ர் அதை ஏற்க மறுத்தார்கள். தம் குடும்பத்தார்களை நேசிப்பதை விட நபி (ஸல்) அவர்களின் உறவினர்களைக் கடுமையாக நேசித்து வந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஃபதக்கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் பங்கைத் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார்கள்.
நாங்கள் விட்டுச் செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தார்கள் இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தான் உண்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு உவப்பானவர்கள் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி-4036
நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தைப் பங்கிடத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். ஆனால் நபிகளாரின் குடும்பத்தாருக்குரிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை தம் மீது சுமத்திக் கொண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டால் தாம் செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நீங்கள் இறந்து விட்டால் உங்களுக்கு யார் வாரிசாகுவார்கள் என்று கேட்க அதற்கு அபூபக்ர் (ரலி) என் குழந்தையும் குடும்பத்தார்களும் ஆவார்கள் என்று கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் நாங்கள் மட்டும் ஏன் நபி (ஸல்) அவர்களுக்கு வாரிசாகக் கூடாது என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) நபிக்கு யாரும் வாரிசாக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். என்றாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாருடைய தேவைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு நானும் பொறுப்பேற்றுக் கொள்வேன். அவர்கள் யாருக்குச் செலவு செய்து வந்தார்களோ அவர்களுக்கு நானும் செலவு செய்வேன் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத்-60 (57)
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களே கட்டளையிட்டுள்ளார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்துள்ளார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்கள் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)
நூல் : புகாரி-3713
உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்களைத் தம் தோளி ன் மீது ஏற்றிக்கொண்டு என் தந்தை உனக்கு அற்பணமாகட்டும்.
நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய். (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்தில்லை என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (இதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
நூல் : புகாரி-3542