அடுத்தவரின் அந்தரங்கத்தை காண பாலியல் இணையதளத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! – Sri Lanka Tamil News

சீனாவில் சில விடுதிகளில் இரகசிய கேமராக்கள் மூலம் தங்கும் தம்பதிகளின் தனிப்பட்ட தருணங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அவை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு விற்கப்படுகின்றன என பிபிசி மேற்கொண்ட புலனாய்வு தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த எரிக் மற்றும் அவரது காதலி எமிலி ஆகியோரின் தனிப்பட்ட தருணங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சில வாரங்களுக்குப் பின்னர், எரிக் பாலியல் இணையதளமொன்றைப் பார்வையிட்டபோது, தங்களது வீடியோ அங்கு பதிவேற்றப்பட்டிருப்பதை கண்டறிந்ததால், இருவரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவில் இவ்வகை மறைமுகப் பதிவு சட்டவிரோதமானதாயினும், இது பெரிய அளவிலான மறைமுக தொழிலாக வளர்ந்துள்ளதாக புலனாய்வு சுட்டிக்காட்டுகிறது. 180-க்கும் மேற்பட்ட விடுதி அறைகளில் சிறிய அளவிலான கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் காட்சிகள் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் நேரலையாக பகிரப்படுகின்றன. சில முகவர்கள் மாதாந்த சந்தா வசூலித்து இவ்வகை காட்சிகளை வழங்குகின்றனர்.

பிபிசி ஆய்வின்படி, இந்த கேமராக்கள் மிகவும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவற்றை கண்டறிவது கடினமாக உள்ளது. ஒரு விடுதி அறையில் காற்றோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா கட்டிட மின்சார அமைப்புடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அறையில் மின்சாரம் பயன்படுத்தத் தொடங்கியவுடன் கேமராவும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சில முகவர்கள் மிகுந்த வருமானம் ஈட்டுகின்றனர். ஒரு முகவர் மட்டும் கடந்த சில மாதங்களில் சுமார் 163,200 யுவான் வருமானம் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவின் சராசரி ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும் என கூறப்படுகிறது.

இதுபோன்ற வீடியோக்களை அகற்றுவதற்காக சில தன்னார்வ அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், சம்பந்தப்பட்ட இணைய தளங்கள் புகார்களுக்கு போதிய பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சீன அரசு விடுதிகளில் மறைமுக கேமராக்கள் உள்ளனவா என்பதை பரிசோதிக்க புதிய விதிமுறைகளை அறிவித்திருந்தாலும், இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எரிக் மற்றும் எமிலி தற்போது அடையாளம் காணப்படுவோம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இடங்களில் செல்லும் போது கூட மிகுந்த கவனத்துடன் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply