
அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களில் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலையால் சிறுவர்களின் உடல்நலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தோல் தொடர்பான நோய்கள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்பு, எரிச்சல், மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படலாம். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புறத்தில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு அதிகமாக ஆளாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களில் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் சிறுவர்கள் முறையான கண்காணிப்புடன் நீரில் விளையாடுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியடைய முடியும் என்றும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் போது வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு நடவடிக்கைகளின் போது அதிகமாக வியர்வை வெளியேறுவதால் சோடியம் மற்றும் பொற்றாசியம் போன்ற உடலுக்கு தேவையான உப்புச் சத்துக்கள் குறையக்கூடும். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விளையாட்டு நடவடிக்கைகளின் போது இடைவேளைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
