அமைதிக்கான ஒரு தற்காலிக வாசல்: ஹோர்முஸ் நீரிணையும் இருவார கால போர் நிறுத்தமும் – Sri Lanka Tamil News

கடந்த ஒரு மாத போரில் மின் நிலையங்கள், பாலங்கள் எனப் பெரும் உட்கட்டமைப்பு சேதங்களை ஈரான் சந்தித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான களமாக அமைய வேண்டும்.

மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த போர் மேகங்கள், தற்போது ஒரு சிறிய இடைவேளைக்கு வழிவிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பது, உலகளாவிய பதற்றத்தை சற்றே தணித்திருகின்றது.

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்த சில மணிநேரங்களிலேயே இணக்கமான ஒரு முடிவுக்கு வந்திருப்பது, போர்க்களத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையையும், அதே சமயம் ராஜதந்திரத்தின் தேவையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்த போர் நிறுத்தத்தின் மையப்புள்ளியாக காணப்படும் ‘ஹோர்முஸ் நீரிணை’, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முதுகெலும்பாகத் திகழும் நிலையில், இந்தப் பாதையை ஈரான் முழுமையாகத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருகின்றார். இதன் மூலம் சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்கவிருந்த பெரும் பாதிப்பு தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருகின்றது.

இருப்பினும், இந்த போர் நிறுத்தம் என்பது ஒரு நிரந்தரத் தீர்வல்ல; அது ஒரு வாய்ப்பு மட்டுமே. “ஈரான் மீதான குண்டுவீச்சு நிறுத்தப்பட்டால் மட்டுமே தாக்குதல் நிறுத்தப்படும்” என்ற ஈரானின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியின் நிபந்தனை, இரு தரப்பிற்கும் இடையிலான நம்பிக்கையின்மையை இன்னும் அப்படியே வைத்திருக்கிறது.

கடந்த ஒரு மாத போரில் மின் நிலையங்கள், பாலங்கள் எனப் பெரும் உட்கட்டமைப்பு சேதங்களை ஈரான் சந்தித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான களமாக அமைய வேண்டும்.

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமை சந்திப்பு, வெறும் போர் நிறுத்த நீட்டிப்பாக மட்டுமில்லாமல், மத்திய கிழக்கில் ஒரு நிலையான அமைதிக்கான ஒப்பந்தமாக மாற வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்காலிகப் போர் நிறுத்தம் என்பது ஆயுதங்களுக்குத் தரப்படும் ஓய்வு மட்டுமல்ல, அது மனித உயிர்களைக் காப்பதற்கான இறுதி வாய்ப்புமாகும். அந்த வாய்ப்பை இரு நாடுகளும் எவ்விதம் பயன்படுத்தப் போகின்றன என்பதில் தான் நாகரிகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஜே.ஏ.ஜோர்ஜ்

நன்றி

Leave a Reply