எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக, அரசுத் துறையின் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடுத்தும் “Work From Home” நடைமுறையை அமல்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக பண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்புகளிலிருந்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலகின் பல நாடுகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது சாதாரணமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவல் காலத்திலும் வீட்டிலிருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ளும் இந்த நடைமுறை நடைமுறையில் இருந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவான நெருக்கடியால் எரிசக்தி பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டன. எரிபொருள் விநியோகத்தில் மேலும் தடைகள் ஏற்பட்டால் மீண்டும் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக எரிபொருள் பெற்றுக்கொள்ள QR குறியீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

