2026 ஆம் ஆண்டிற்கான தபால் கட்டணத் திருத்தத்தின் கீழ் பல சேவைகளுக்கான விலைகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய கட்டண மாற்றங்களின் பிரதான விபரங்கள் வருமாறு:
கடிதங்கள் மற்றும் பதிவுத் தபால்
• சாதாரண கடிதங்கள்: இதுவரை 20 கிராம் ஆக குறிப்பிடப்பட்ட கடிதங்களுக்கான அடிப்படை நிறை வகுப்பு தற்போது 30 கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டணம் 70 ரூபா ஆகும்.
• பதிவுத் தபால் (Registration): கடிதங்களைப் பதிவு செய்வதற்கான மேலதிக கட்டணம் 60 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ. 60 + 70)
• அரச சேவைகள்: அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களினால் அனுப்பப்படும் பதிவுத் தபால் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) ரூ. 130
• கொழும்பு நகர எல்லை: கொழும்பு 1 முதல் 15 வரையான நகர வலயங்களுக்குள் மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கப்படும் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) 50 ரூபா விசேட கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏனைய தபால் சேவைகள்
• தபால் அட்டை (Postcard): ஒரு தபால் அட்டையின் புதிய கட்டணம் ரூ. 40 ஆகும்.
• தபால் அடையாள அட்டை: தபால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ. 200 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
• பொதி மற்றும் கூரியர்: 250 கிராம் வரையிலான சாதாரண பொதிகளுக்கு ரூ. 150, ‘SL Post Courier’ சேவை ஊடாக அனுப்பப்படும் அதே எடையுள்ள பொதிகளுக்கு ரூ. 200 அறவிடப்படும்.
• அச்சுப் பொருட்கள்: 30 கிராம் வரையிலான அச்சுப் பொருட்கள் அல்லது திறந்த பொதிகளுக்கு ரூ. 45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்: தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளைத் தபாலில் அனுப்புவதற்கு (60 கிராம் வரை) ரூ. 40 அறவிடப்படும்.
பணம் மற்றும் தந்தி சேவைகள்
• தந்தி (Telemail): தந்தி சேவைக்கான ஆரம்பக் கட்டணம் (முதல் 10 சொற்களுக்கு) ரூ. 50 ஆகவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூ. 5 அறவிடப்படும்.
• பண அனுப்பல் கட்டணம் (Money Orders): தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பப்படும் பண விநியோகங்களுக்கான (PMT) தரகுப் பணம் (Commission) அதன் பெறுமதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ. 2,000 வரையான பணத்திற்கு ஒவ்வொரு ரூ. 100 இற்கும் ரூ. 2 வீதம் அறவிடப்படும்.
அனைத்து தபால் நிலையங்களும் இந்தப் புதிய கட்டண முறைக்கேற்ப செயற்படுமாறும், பொதுமக்கள் இது குறித்துத் தெளிவுபெறுமாறும் அனைத்து தபால் நிலையங்கள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம் மூலம் தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பீ. சத்குமாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

