புதுடெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்டுள்ளன.
ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அதேசமயம், இண்டிகோ நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.7,587.5 கோடியை ஈட்டியுள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்தித்தது. நீண்ட காலமாக லாபத்தில் இயங்கி வந்த அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் கடந்த நிதியாண்டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது.
ஏர் இந்தியாவின் கடன் ரூ.26,879.6 கோடியாகவும், இண்டிகோவின் கடன் ரூ.67,088.4 கோடியாகவும் இருந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றின் கடன் முறையே ரூ.617.5 கோடி, ரூ.78.5 கோடி மற்றும் ரூ.886 கோடியாக உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா மற்றும் லாபகரமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களை டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கையகப்படுத்தியது.