அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (11) இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 8 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது கருத்து வௌியிட்ட தமிழக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா கூறியுள்ளதாவது,
நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இராமேசுவரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம். விரைவில் அதற்கான திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
The post கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம்! appeared first on Global Tamil News.