புசான் (தென்கொரியா): தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
“ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47% ஆக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கான ஒப்பந்தம் இது. எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து விவாதிப்போம்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய மண் தாதுக்கள் தொடர்பான பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. அது உலகத்துக்கானது. தைவான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. அதேநேரத்தில், உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். நாங்கள் நீண்ட காலமாக அது குறித்து பேசி உள்ளோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். ஜி ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார். மேலும், உக்ரைன் விஷயத்தில் நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
