ஜோன்ஸ்டனை காணவில்லை – 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதனால், அவரைக் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் இன்று காலை (30) கைது செய்யப்பட்டிருந்தார்.


ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்டிற்குச் சொந்தமான லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியபோது சதோச நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் லொறியை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.


இந்த விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகனை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


அதன்படி, ஜொஹன் பெர்னாண்டோ இன்று கைது செய்யப்பட்டார்.


இதையடுத்து ஜோன்ஸ்டன்பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் அவர் இருக்கும் இடத்தை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிதுள்ளார்.


இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஜொஹன் பெர்னாண்டோவை நாளை (31) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply