அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சில முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்யத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
47 வயதான ஆசிஃப் மெர்சண்ட் (Asif Merchant)) என்ற நபர் இந்த சதித் திட்டத்தில் தொடர்புடையவர் என விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சிலரை சேர்த்து, டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், அமெரிக்க மண்ணில் ஈரான் ஆதரவு பெற்ற சதித் திட்டம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை உடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நீதிமன்றத்தில் சாட்சி அளித்த ஆசிஃப் மெர்சண்ட் (Asif Merchant) தாம் அந்த திட்டத்தில் இணைந்தது தனது குடும்பத்தினரை பாதுகாப்பதற்காகவே என விளக்கம் அளித்துள்ளார்.
தனது குடும்பம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சதித் திட்டம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானி (Qassem Soleimani) கொ*ல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. அந்த தாக்குதல் டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான இந்த சதித் திட்டத்தில் அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட நிக்கி ஹேலி ஆகியோரும் இலக்காக இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், வெளிநாட்டு ஆதரவு பெற்ற சதித் திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
