சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, மதுரையில் இன்று (அக்.12) தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து, 13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு, 15-ம் தேதி சென்னை வடக்கு, 16-ம் தேதி மத்திய சென்னை, 24-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், 25-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29-ம் தேதி நாமக்கல் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்து, நவ.3-ம் தேதி ஈரோடு தெற்கு, 4-ம் தேதி கோவை வடக்கு, 5-ம் தேதி நீலகிரி, 6-ம் தேதி திருப்பூர் தெற்கு என தொடர்ந்து, சேலம், தருமபுரி, தஞ்சாவூர் தெற்கு என 28 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நயினார் நாகேந்திரன் நவ.22-ம் தேதி தூத்துக்குடி தெற்கில் நிறைவு செய்கிறார். பின்னர் இரண்டாம்கட்ட பயணத்தை தேனியில் நவ.24-ம் தேதி தொடங்குகிறார்.
இதற்கிடையே, சென்னையில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக பொதுக்கூட்டங்களாக நடத்த நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.