பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, பிள்ளையான் தரப்பால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிள்ளையான் தற்போது வேறொரு சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரிடமிருந்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் முறையான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

இதனையடுத்து, தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

நன்றி

Leave a Reply