பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24,25 மற்றும் 40 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், இதில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர்.
இதேவேளை காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.