போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

பிரித்தானியாவின் வீதிகளில் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த குற்றக் கும்பல்களுக்கு எதிராக பொலிஸார் நடத்திய ஒரு வார கால அதிரடி வேட்டை,  ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் மொத்தம் 2, 180 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குற்றக் கும்பல்களால் போதைப்பொருள் விற்பனைக்காகச் சுரண்டப்பட்ட 800 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தெருக்களில் இந்தச் சிறுவர்கள் போதைப்பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது பொலிஸாரின் ‘ரகசிய ஆயுதமாக’த் திகழ்ந்தது ‘மேஜர்’ என்ற பொலிஸ் நாய். ஹாம்ப்ஷயர் கான்ஸ்டாபுலரி பிரிவுடன் இணைந்த இந்த நாய்,  பூனை மலம் மற்றும் கஞ்சா வாசனையுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் கோகோயின் மற்றும் ஹெராயின் தடயங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்துக் காட்டியது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், ஆரம்பத்தில் எதுவுமே இல்லாதது போலத் தோன்றினாலும், தீவிரமான தேடுதலுக்குப் பின்  கைத்துப்பாக்கி,  பயோனெட் மற்றும் கத்தி ஆகியன மீட்கப்பட்டன. மேலும், போதைப்பொருளை எடைபோடும் தராசுகளும், லண்டன் முகவரியைக் கொண்ட ஓர் ஈரானிய நபரின் ஓட்டுநர் உரிமமும் கண்டெடுக்கப்பட்டன.

கைவிலங்கிடப்பட்ட ஒரு பெண் உட்பட 121 பேர் அந்த மாவட்டத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் திரட்டப்பட்ட இந்த ஆதாரங்கள் லண்டன் அதிகாரிகளுடன் பகிரப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த ‘தீவிர நடவடிக்கை வாரம்’ போதைப்பொருள் கடத்தல் உலகிற்கு ஒரு பாரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

நன்றி

Leave a Reply