40
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல், 1960-களில் வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த அதே தவறுகளை மீண்டும் பிரதிபலிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
1967-ல் வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்த போதும், தளபதி வில்லியம் வெஸ்ட்மோர்லேண்ட் நாடு திரும்பி ‘நாங்கள் வெற்றி பெறுகிறோம்’ என்று பொய்க் கதைகளை கூறியதை அரக்சி சுட்டிக்காட்டியுள்ளார். அன்று ஊடகங்களால் ‘ஐந்து மணி நேர வேடிக்கை’ (Five O’Clock Follies) என அழைக்கப்பட்ட அதே போன்ற ஒரு மாயையான சூழலையே இப்போதும் அமெரிக்கா உருவாக்கி வருவதாக அவர் சாடியுள்ளார்.
மேலும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் (Hegseth) வெளியிடும் தகவல்கள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்பு பலம் சிதைக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா வாதிட்டாலும், அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானம் ஈரானிய தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை அவர் உதாரணமாகக் காட்டினார்.
ஈரானின் கடற்படை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா கூறுவது பொய் என்றும், அதற்கு மாறாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் (USS Gerald Ford) போர்க்கப்பல் பின்வாங்கியுள்ளதையும், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) தள்ளிச் செல்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 திகதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட சுமார் 1,300 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் அமெரிக்க ராணுவத்தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தசாப்தங்கள் மாறினாலும், அமெரிக்காவின் “நாங்கள் வெற்றி பெறுகிறோம்” என்ற போலிப் பரப்புரை மாறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
