28
மன்னார் நகர சபையின் 9 ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழன் (26) காலை 10 மணியளவில் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு குறித்த அமர்வில் கலந்து கொள்ள குறித்த அமர்விற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
நகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு நகர சபையின் தவிசாளரினால் எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. எனினும் இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நகர சபையின் 09 ஆவது அமர்வு இடம் பெற்றுள்ள போதும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த அமர்வில் சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதோடு,சில உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன் வைத்ததோடு,நகர சபையின் தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையில் பாரிய தர்க்க நிலை ஏற்பட்டது. நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் இடம் பெற்ற தர்க்க நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியமை மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) இடம் பெற்ற நகர சபையின் 9வது அமர்வுக்கு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அறிய முடிகிறது.

