64
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சமாளிக்க மன்னார் மாவட்டத்தில் விசேட விநியோக பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகம் தொடர்பாக நடைபெற்ற விசேட கலந்துரையாடல், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீன்பிடி பருவம் தொடங்கியுள்ளதால் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அறுவடை காலத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கும் போதுமான விநியோகம் மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஒரு எரிபொருள் கப்பல் வந்துள்ளதனால் ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யா , சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் தவிர்க்க இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் பிரதி அமைச்சா் தொிவித்தாா்.


