மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார் .
உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்க் கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்க் கொண்டு மின் கட்டணத்தை 13% ஆல் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது தொடர்பில் இறுதி தீர்மானத்தை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார் .
இதேநேரம் எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் இது ஒரு பாரிய பிரச்சினை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, இருப்பினும் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
எனவே மின்சாரத்தை சிக்கமாக பயன்படுத்தி ,ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே நிலைமையைச் சமாளிக்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண மேலும் தெரிவித்துள்ளார் .
Post Views: 3
