மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (18) நடைபெற்ற வியோன் (WION) சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலகளாவிய கட்டமைப்பு ஒரு வலுவான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் தருணத்தில் நாம் இன்று சந்திக்கிறோம்.

வர்த்தகப் பாதைகள் முடக்கப்படுகின்றன. தொழில்நுட்பப் போட்டி நாடுகளுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையை மீண்டும் வடிவமைத்து வருகின்றது.

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. பனிப்போருக்குப் பிந்தைய உலகமாக இப்போது மாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தூரமானதாக அல்லது இரண்டாம் நிலையாகக் கருதப்பட்ட மூலோபாய வலயங்கள் இப்போது உலக அரசியலின் மையப்புள்ளிகளாக மாறி வருகின்றன. அத்தகைய ஒரு வலயமே இந்தியப் பெருங்கடல்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே இருந்தது.

இந்தியப் பெருங்கடல் சமூகங்களைப் பிரிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அந்தத் தொடர்பின் பழமையான உதாரணங்களில் ஒன்றாகும்.

உலகளாவிய மசகு எண்ணெய் கப்பல் போக்குவரத்துகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்தப் கடல் வழியாகவே பயணிக்கிறது. அத்துடன் உலகின் கொள்கலன் போக்குவரத்தில் பாதியளவு கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.

இந்தப் பாதைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது, அதன் விளைவுகளை முழு உலகமும் உணரும். அண்மைய உலகளாவிய நிகழ்வுகள் இந்த ஸ்திரத்தன்மை எவ்வளவு பலவீனமாக இருக்கக்கூடும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை எரிசக்தி சந்தை மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதேவேளை, பிரதான அதிகார நாடுகளுக்கு இடையிலான மூலோபாய போட்டிகள் கடல் வலயங்களுக்குள் பெருகிய முறையில் தென்படுகின்றன. இதன் காரணமாகவே, இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மை மீண்டும் ஒருமுறை தீர்க்கமானதாக மாறியுள்ளது.

மூலோபாய ரீதியாக உணர்வுபூர்வமான வலயங்களில் அமைந்துள்ள நாடுகள், தமது வெளிநாட்டுக் கொள்கையை சமநிலை, தொலைநோக்கு பார்வை மற்றும் ஒழுக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும். எமது இறையாண்மையைப் பாதுகாப்பதோடு எமது கடல் வலயங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவின் பொருளாதார அளவீடுகளுக்குப் பக்கபலமாக அமைகின்றன. எமது இரு நாடுகளும் இணைந்து பிராந்திய ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் பலப்படுத்த முடியும்.

செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் என்பன இனி வெறும் பொருளாதாரத் துறைகள் மட்டுமல்ல. அவை வரும் தசாப்தங்களில் உலகளாவிய அதிகாரத்தை வடிவமைக்கும் மூலோபாயக் களங்களாகும்.

உலகளாவிய மாற்றங்களுக்கு வெறும் எதிர்வினைகளை ஆற்றுவது மட்டுமல்லாமல், அதனை வழிநடத்தி வடிவமைக்கும் பொறுப்பும் எனது தலைமுறைக்கு உள்ளது. போட்டிகளை விட ஒத்துழைப்பு மேலோங்கி நிற்கும் மற்றும் சர்வதேச சட்டத்தின் மூலம் ஸ்திரத்தன்மை வழிநடத்தப்படும் உலகைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அதுவாகும்.”

இந்தியப் பெருங்கடல் எப்போதும் இருந்ததைப் போலவே – நாகரிகங்களுக்கு இடையிலான பாலமாகவே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply