விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம் | Heavy rain in 4 districts including Chengalpattu tomorrow Meteorological Department

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 8 செமீ, திருச்சி மாவட்டம் துறையூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், புகையிலை நிலையம், கொடைக்கானல், ஒட்டன்சத்திரத்தில் தலா 6 செமீ, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், சேலம், நீலகிரி மாவட்டம் கோடநாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பத்தூர், தேனி மாவட்டம் சோத்துப்பாறை, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply