111
ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால், ஆலைக்குள் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தின் வீரியத்தால் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது்டன் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
