வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கான 25% வரி விதிப்பு ஆக.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.
பின்னர், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், அந்த வரிகளை 10% ஆகக் குறைத்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அமெரிக்க டிரம்ப் தெரிவித்துள்ளதாவது; “இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன.
அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளனர், மேலும் ரஷ்யா உக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராகவும் உள்ளனர்.
எனவே இந்தியா ஆகஸ்ட் முதல் 25% வரியை செலுத்தும், மேலே உள்ளவற்றுக்கு அபராதம் செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் டிரம்ப் appeared first on Dinakaran.