வங்காள விரிகுடாவில் மோந்தா (Montha) புயல் அச்சுறுத்தும் வகையில் நகர்ந்து வருவதால் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் இந்த புயல், ஏற்கனவே கடலோரப் பகுதியில் பலத்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு வழிவகுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் அதிக கடல் சீற்றம், வெள்ளம் மற்றும் பரவலான இடையூறுகளைச் சந்தித்ததால், மத்திய அரசு அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, மோந்தா புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 410 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இந்த புயல் இன்று (28) மாலை அல்லது இரவுக்குள் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஒரு கடுமையான சூறாவளி புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் போக்கு ஏற்கனவே பல கடலோர மாவட்டங்களைத் தாக்கியுள்ளன.
இதனால் சித்தூர், திருப்பதி மற்றும் காக்கிநாடாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டத்தின் நகரி தொகுதியில், நான்கு நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
குஷஸ்தலி ஆற்றில் இருந்து வரும் வெள்ளப்பெருக்கு முக்கிய சாலைகளைத் துண்டித்ததால், நகரி நகரம் மற்றும் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு போன்ற கிராமப்புறங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அதிகாரிகள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆபத்தான நீரோட்டங்கள் காரணமாக ஆற்றங்கரைகளுக்குச் செல்வதை பொலிஸார் தடைசெய்ததால், மாற்றுப் பாதைகள் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் PIT தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து 1,000 கனஅடி தண்ணீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.
அதே நேரத்தில் உள்ளூர் நிர்வாகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தன.
காக்கிநாடா மாவட்டத்தின் கடற்கரைகளில் பலத்த காற்று வீசியது, உப்பாடாவில் கடல் கொந்தளிப்பாக இருந்தது.
அலைகள் கிராமங்களுக்குள் நகர்ந்து, கடலோர அரிப்பை அதிகப்படுத்தி, மீனவர்களிடையே பீதியை ஏற்படுத்தின.
கடல் நீர் மேலும் உள்நாட்டிற்குள் பெருக்கெடுத்ததால், உப்பாட, சுப்பம்பேட்டை, மாயப்பட்டினம் மற்றும் சுரதாபேட்டை ஆகிய இடங்களிலிருந்து குடும்பங்களை பொலிஸார் வெளியேற்றினர்.
75 கி.மீ கடற்கரையில் பரவியுள்ள ஐந்து கடலோர மண்டலங்கள் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று திருப்பதியின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை குழுக்கள் முழு வீச்சில் நிறுத்தப்பட்டுள்ளன.


தமிழ்நாடு
தெற்கே வெகு தொலைவில், தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை திங்கட்கிழமை பலத்த மழையால் பாதிக்கப்பட்டன.
மோந்தா வங்காள விரிகுடாவில் சென்னையிலிருந்து சுமார் 480 கி.மீ கிழக்கே அமைந்திருப்பதாக பிராந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைப் பார்வையிட்டு புயல் நீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
