இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இத் திட்டத்தின் மூலம் இலங்கை குடிமக்களின் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாமல் இரகசியமாக எடுக்கப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது என்பதால் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளையும் வலுவற்றதாக்கி உத்தரவு வழங்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
அத்துடன், இந்த அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுப்பதற்கும் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.