வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆகஸ்ட் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச உள்ளேன். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகும் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்னவிதமான விளைவுகள் என்பதை இப்போதைக்கு பகிரங்கமாக கூற முடியாது.
ரஷ்ய அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைய விரும்புகிறேன். இதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசுவேன். இந்த சந்திப்புக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி யூரி உஸ்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிபர் ட்ரம்ப், அதிபர் புதின் சந்திப்பு நடைபெற உள்ளது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும்2 மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
இதேபோல அமெரிக்கா தரப்பில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அந்த நாட்டின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதித் துறை அமைச்சர்கள், 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள். பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தால் அதிபர் ட்ரம்பும் அதிபர் புதினும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.