வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராட்டன என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் போனில் பேசவில்லை. விரைவில் அவருடன் பேச திட்டமிட்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இப்போது இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க அதிபர் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என்றார்.
முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப் “இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகும் உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்னவிதமான விளைவுகள் என்பதை இப்போதைக்கு பகிரங்கமாக கூற முடியாது.
ரஷ்ய அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைய விரும்புகிறேன். இதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசுவேன். இந்தச் சந்திப்புக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் பங்கேற்பார்கள்” என்று கூறியிருந்தார். ஆனால், ரஷ்ய அதிபர் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சந்திப்பில், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.