எரிபொருள், எரிவாயு விலை உயர்வை தடுக்க முடியாது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் நிலைமையின் காரணமாக உலக சந்தையில் ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. அந்த விலை உயர்வை இலங்கையிலும் மக்கள் தவிர்க்க முடியாமல் சுமக்க வேண்டியிருக்கும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை இலங்கைக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடல் மார்க்கம் வழியாக இறக்குமதி-ஏற்றுமதி செய்கின்ற அனைத்து நாடுகளுக்கும் இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதேபோல் விமானப் போக்குவரத்திற்கும் இது கடுமையான சவாலாக உள்ளது.

இது ஒரு சாதாரண உலக பொருளாதார நெருக்கடி அல்ல; இது ஒரு உலகளாவிய போர் நிலைமை. போர் சூழ்நிலையில் விநியோகப் பாதைகள் பாதிக்கப்படுகின்றன, நிறுத்தப்படுகின்றன அல்லது சிக்கலாகின்றன. தற்போது மத்திய கிழக்கிற்கான சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகத்தில் பயன்படுத்தக்கூடிய அனைத்து மாற்று வழிகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். உலக சந்தையில் ஏற்படும் விலை உயர்வுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் சந்தையில் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது. அந்த உயர்வை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனினும், எங்களிடம் ஏப்ரல் மாத இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் எரிவாயு வழங்குவதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திற்கும் இந்த ஆண்டு முழுவதும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதென” அவர் தெரிவித்தார்.

விநியோக தடைகள் ஏற்பட்டால் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், தேவையானால் கூடுதல் ஆர்டர்களைச் செய்யவும் அதிகாரிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கருத்துகளை அமைச்சர் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply