ஏயார்பஸ் ஊழல் வழக்கு: மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு நெருக்கடி?

ஏயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் போது, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC), இன்று (19.03.26) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் இது தொடர்பான உண்மைகளைச் சமர்ப்பித்தது.

ஏயார்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து, மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபாய் பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தவிர, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 20 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேன முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினரும் உரிய ஆணைக்குழுவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply