கட்டார் மீதான இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது

கட்டார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும் , அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும், அடாவடித்தனத்தையும்  நீடிக்கவும், அதன்  நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்குள்ள அச்சுறுத்தலை அதிகரிக்கவும் வாய்ப்பான விதத்தில் அரசாங்கத்தினதும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் நீண்டகால இயலாமையை வெளிப்படுத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ,அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கட்டாரை இஸ்ரேல் தாக்கிய சந்தர்ப்பத்தில்,ஈரானில் நடைபெற்ற 50 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய பலஸ்தீனம் தொடர்பான 3 நாள் உலக இஸ்லாமிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு நான் தெஹ்ரான் நகரில் இருந்தேன்.

அங்கிருந்து நாடு திரும்பும் போதுதான் ,கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள உப்புச் சப்பற்ற அறிக்கையொன்றைக் கண்ணுற்றேன்.அதன் ஊடாக,ஓர் ஆக்கிரமிக்கும் நாட்டையும் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் நாட்டையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய அளவுக்குக் கூட இந் நாட்டு அரசாங்கம்   திராணியற்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதோடு,ஒரு வான்வழித் தாக்குதலுக்கும்,  வெறும் சம்பவத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு அல்லது அதை விடவும்  மோசமாக, ஒரு கூலிப்படையின்  நடத்தைக்கும்,அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் இயல்பாகக் காணப்படும் ஒருமைப்பாட்டிற்கும் இடையிலான உணர்வுபூர்வமான தன்மையைக் கூட அரசாங்கம் கண்டுகொள்ளாது இருப்பதை அறிந்து கொண்டேன்.

நெதன்யாகு அரசாங்கத்தின் கொஞ்சம் கூட மனசாட்சியற்ற மற்றும் கீழ்த்தரமான அத்துமீறல்கள், மனிதநேயம் கண்ணியம், சர்வதேச சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் பிற நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை மீறும் போது இலங்கை அரசாங்கத்தின்  வெறுமனே புதினம் பார்த்துக் கொண்டிருக்கும் வெறிச்சோடித்தனம்,அறவே பொறுப்புணர்ச்சியற்ற தன்மை மற்றும் கொடூரமான குற்றங்கள் தோய்ந்த கலாசாரத்தின் ஆழ,அகலத்தையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. 

துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் பொறுப்புணர்ச்சியுடனான   நிர்வாகக் கட்டமைப்பையும், கலாசாரத்தையும் உருவாக்குவதென்ற உறுதிமொழியின் பேரில் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் இவ்வாறு மிகவும் பொடுபோக்காக நடந்து கொள்வது கவலைக்குரியது.

 அனைத்து விதமான அளவுகோல்களைக் கொண்டு மதிப்பீடு செய்தாலும்,இவ்வாறான தான்தோன்றித்தனமான போக்கினால்   இலங்கை அரசாங்கம் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவிக்கொள்கின்றது.இஸ்ரேலை  பொறுத்தவரை அரசாங்கத்தின் “சமாளிப்பு” மிகவும் விசனமளிப்பதாக உள்ளது. 

 நெதன்யாகு அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகள், வன்முறைக் கலாசாரம், ஆக்கிரமிப்பு மற்றும் பேரழிவு தரக்கூடிய யுத்த நடவடிக்கைகள்  பிராந்தியத்திலும்,ஏனைய நாடுகள் சிலவற்றிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியிருப்பதை  சமாதானத்தை  விரும்பும்  உலக மக்கள்  இரத்தம் தோய்ந்த இதயங்களுடன் நோக்க வேண்டிய நிலைமை நேர்ந்திருக்கின்றது. சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலின் ஈனச் செயல்கள் யாவும் பாரதூரமாகக் கண்டிக்கத்தக்கவை

 ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில், குறிப்பாக காஸாவில் இழைக்கப்பட்டுவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மட்டுமல்லாமல், கடந்த ஜூன் மாதம் ஈரான் வரை நீடிக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாகவும், இப்போது கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பாகவும் நெதன்யாகுவின் அரசாங்கத்தை அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு கண்டிக்காமல், இலங்கை அரசாங்கம் தவிர்ந்து கொண்டிருப்பது  ஓர் இஸ்ரேல் சார்பு தந்திரோபாய அல்லது மூலோபாய நடவடிக்கையா  என்ற பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.

குறிப்பாக, கட்டார் மீதான தாக்குதல் குறித்த சமீபத்திய அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும் , அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும்,அடாவடித்தனத்தையும்  நீடிக்கவும், அதன்  நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்குள்ள அச்சுறுத்தலை அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அரசாங்கத்தினதும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் நீண்டகால இயலாமையை வெளிப்படுத்துகின்றன.

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிந்திய அறிக்கையைப் படிக்கும் எந்தவொரு நியாயமான பிரஜையும் அத்தகைய அறிக்கைகளை தயாரிப்பது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலோ அல்லது அரசாங்கத்திலோ உள்ள இஸ்ரேலிய “மறைகரம்”என்பதைத் தவிர வேறில்லை என்று முடிவுக்கே வருவார்கள்.  

ஒரு சராசரி இலங்கை பிரஜை, கட்டார் தாக்குதலின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள  அரசாங்கத்தின் அக்கறையற்ற, ஒருதலைப்பட்சமான, திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையை புரிந்துகொள்ள முடியாத  அளவுக்கு உணர்ச்சியற்றவராகவும், நியாயமற்றவராகவும் இருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு,உள்நாட்டு  முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுத் துறைக்கு எங்ளுக்கு கட்டார் தேவை, இது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான்,ஜோர்தான்,லெபனான் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றின் ஒத்துழைப்புகளுடன், நாட்டிற்கு மிகவும் தேவையான அந்நியச் செலாவணியை வெகுவாக ஈட்டித்தருகின்றது.

  ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டு  அமர்வின் போது இலங்கைக்கு ஆதரவாகப் பேச வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் உதவியைப் பெறுவதையும் இது சிக்கலுக்கு உள்ளாக்கலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, இலங்கையில் குறிப்பிட்ட சில செயற் திட்டங்களுக்கு நிதி உதவியைக் கோரிவிட்டு, சமீபத்தில்தான் நாடு திரும்பியிருக்கிறார்.

 இவ்வாறிருக்க, அந்த மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்போது, ​​இலங்கை அரசாங்கம் ஆக்கிரமிப்பாளரின் பெயரைக் குறிப்பிடவோ அல்லது இறையாண்மை மிகவும் வெளிப்படையாக மீறப்பட்ட நாட்டின் அரசாங்கத்தின் மற்றும் மக்களின் உணர்வுகளை எவ்வாறு பகிர்ந்து கொண்டது என்பதைப் பற்றிப் பேசவோ கூட துணிவதில்லை என்பது ஒரு வேதனையான உண்மையாகும்.

 இஸ்ரேலின் கடுமையான அத்துமீறல்களை வெறும் சம்பவங்கள் அல்லது தாக்குதல்கள் என்று  வெறுமனே பட்டும் படாமலும் அழைப்பதன் மூலம், “இஸ்ரேல் தான் இதைச் செய்தது” என்று துணிச்சலான கருத்துக்களை திட்டவட்டமாக முன்வைக்க முடியாமல் , அரசாங்கத்தையும்,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சையும் அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது யார்? 

இந்த நிலைமை நீடித்தால் ,இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பொறிமுறை வெறும் கேலிக் கூத்தாக மாறுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும் என்றுள்ளது.

நன்றி

Leave a Reply