சட்டத்தரணிக்கு பிணை – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை , கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும் , காவல்துறையினரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறை   தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply