செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (02) புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 09ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 41 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 50 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 206 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 222 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.