செம்மணி – பெரிய எலும்பு கூட்டு தொகுதியுடன் சிறிய எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் , ஒப்பிட்டளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு , ஒப்பிடளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.  குறித்த எலும்பு கூடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இதேவேளை செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 29 ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 09ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 41 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 50 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 206 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.    இதுவரையில் 222 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply