ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (CCC) புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேசிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார வேலைத்திட்டங்கள், அதன் குறிக்கோள்கள் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக அரச–தனியார் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விளக்கமளித்தார்.
இலக்கு மயமான கொள்கைகள் மற்றும் அவற்றைச் சீரமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, சமூக நலனையும், சுற்றாடல் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தங்களது பங்களிப்பு, எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.
இந்நிகழ்வில் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, உப தலைவர் பிங்குமால் தெவரதந்திரி, பிரதி உப தலைவர் வினோத் ஹைதிராமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.