ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின்  நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு

கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை.

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை  , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 07 உறுப்பினர்களை உள்ளடக்கியது.

இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

மருத்துவ உதவித் தொகை அதிகரிப்பு: 

சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகைகளை திருத்தம் செய்து அவற்றை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மருத்துவ உதவி வழங்குவதில் தற்போதுள்ள கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தி, சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறும் நோயாளிகள் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியரின் பரிந்துரையின் பேரில் மாத்திரம் மருத்துவ உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு  100,000 ரூபா நிதியுதவி: 

பல்கலைக்கழகக் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள், தங்களது கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்க நிர்வாக சபை தீர்மானித்தது.

உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்தோரை கௌரவித்தல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 20-ஆக இரட்டிப்பாக அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய தீர்மானிக்கப்பட்டது.

சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல்: 

அரச வைத்தியசாலைகளில் இதய சத்திரசிகிச்சைகள் (Heart Surgeries) மற்றும் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சைகளுக்காக நிலவும் நீண்டகால காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கு, ஜனாதிபதி நிதியத்தின் தலையீட்டுடன் கூடிய விரைவான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன் கீழ் வைத்தியசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது  கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிவாரணங்கள்:

 ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் 10,000 ரூபாய் விசேட கொடுப்பனவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 54,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளில் இருக்கும்போது விபத்துக்களுக்குள்ளான குடும்பங்கள், சிறுநீரக நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவோரின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான கல்வி உதவிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை: 

ஜனாதிபதி நிதியத்தின் நிதி நிலைமை வரலாற்றில் என்றுமில்லாதவாறு உயர்மட்டத்தை எட்டியுள்ளது. நிதியத்தின் மூலம் உதவி பெறுவோரின் விபரங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் ‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகளும் கடந்த வருடத்தில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டிலும் அதிகளவானோர் பயனடையும் வகையில் திட்டங்களைச் செயற்படுத்த நிர்வாக சபை அனுமதி வழங்கியது.

இக்கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply