நவி மும்பையில் நேற்று (30) நடந்த மகளிர் 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு அற்புதமான சதத்தை அடித்தார்.
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்த வெற்றியின் மூலம், 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா தனது மூன்றாவது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு நவி மும்பையில் அமைந்துள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அவுஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனைகளாக அணித் தலைவர் அலிசா ஹீலி – போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர்.
இவர்களில் ஹீலி 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து எல்லிஸ் பெர்ரி களமிறங்கினார்.
இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட லிட்ச்பீல்ட் – பெர்ரி ஜோடி விரைவாக ஓடடம் குவித்தது.
இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
அதிரடியாக ஆடிய லிட்ச்பீல்ட் வெறும் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மறுமுனையில் பெர்ரி அரைசத்தை நோக்கி முன்னேறினார்.
155 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்த இந்த ஜோடியை அமன்ஜோத் கவுர் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் லிட்ச்பீல்ட் 119 ஓட்டங்களில் போல்டானார்.
சிறிது நேரத்திலேயே பெர்ரி அரைசதம் அடித்தார்.
பின்னர் வந்த பெத் மூனி 24 ஓட்டங்களிலும், அன்னபெல் சுதர்லண்ட் 3 ஓட்டங்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாட அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட வேகம் சீராக உயர்ந்தது.
இதனிடையே பெர்ரி 77 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் கார்ட்னர் (63 ஓட்டம் ) தவிர ஏனைய வீராங்கனைகள் பெரிய அளவில் ஓட்டம் எடுக்கவில்லை.
49.5 ஓவர்கள் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 338 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவுஸ்திரேலிய அணியும் சரிசமமாக பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தது.
இதனால், ஆட்டம் விறுவிறுப்பாக கடைசிவரை சென்றது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்திய அணி சார்பில் அதிகபடியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ஓட்டங்களை எடுத்தார், அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 89 ஓட்டங்களை எடுத்தார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
