தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்

புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என கூறுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான தயக்கத்தினை காட்டிநிற்பதையே நாங்கள் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி பகுதியில் அமைந்துள்ள வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்திற்கான கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலும் கோயில் பூசகரின் தலைமையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், இந்து மதகுருமார் மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், செங்கலடி பிரதேச சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமூக சேவகரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மோகன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலய பூஜையினைத் தொடர்ந்து சுபமுகூர்த்த வேளையில் இந்து மதகுருமார் மற்றும் அதிதிகள், ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் ஆகியோரினால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு வழிநடத்தல்களுக்குள்ளாகிவரும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இளைஞர்களை எமது சமூக கலாச்சாரங்களை பாதுகாக்கக் கூடியவர்களாக எதிர்காலத்தில் எமது பகுதிகளை கட்டியமைப்பவர்களாக தலைமைத்துவம் உள்ளவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு ஆலயங்களுக்குள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தில் தமிழ் மக்கள், எமது அரசியல் தலைமைகள் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தினையும், சமயத்தினையும் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.

கடந்த ஆண்டு எமக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படாத போதிலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத்தினையும் சமயத்தினையும் வளர்ப்பதற்கு ஆலயங்கள் பங்களிப்பு செய்துவந்துள்ளன. தொடர்ந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

 

நன்றி

Leave a Reply