முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஜப்பானிய முருக பக்தர்கள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் ஜூன் 14 ஆம் திகதி முதல் தமிழகத்தில் உள்ள பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த ஜப்பானியர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர் சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வரும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.